Archives: ஜூலை 2018

நம்மைப் போன்ற பாவிகள்

என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.

சவால்களை மேற்கொள்ளல்

நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.

தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).

அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.

இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.

துக்கத்தில் நம்பிக்கை

நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.

லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.

அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.

தேனீக்களும், பாம்புகளும்

சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.

பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.

மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.

நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.